Wednesday, April 8, 2020

ஐம்பத்தொன்பதாவது ஸர்க்கம் – வசிஷ்டபுத்திரர்களின் சாபம்


சாபத்தினால் சண்டாள ரூபத்தை கொண்டிருப்பவரும், இவ்வாறு வாக்கியத்தை சொன்னவருமாகிய ராஜாவிடம் விஷ்வாமித்ரர் கிருபையால் மதுரமான வாக்கியத்தை கூறலானார், ‘இக்ஷ்வாகு வம்சத்தவனாகிய குழந்தாய், மானுடர்க்கு அதிபதியே, நீ பயப்படாதே. உன்னை நல் தார்மிகன் என்று நான் அறிவேன். உனக்கு சரணமாய் நான் ஆகிறேன். நல்வரவு. ராஜா, புண்ணிய கர்மம் புரிபவர்களும், யாக சகாயம் செய்கிறவர்களுமான எல்லா மகரிஷிகளையும் நான் வரவழைக்கிறேன். அதனால் நீ அமைதியாய் யாகம் செய்வாய்.இந்த குரு சாபத்தால் உண்டாயிருக்கும் எந்த ரூபம் உன்னிடமிருக்கிறதோ, இதே உருவத்துடன் சரீரத்துடனேயே நீ (தேவலோகம்) செல்வாய். நராதிபதி, நீ கௌஷிகரை (அதாவது விஷ்வாமித்ரரை) சரணமென அணுகி சரணமடைந்து விட்டாய். உனக்கு இந்த ஸ்வர்கம் கைக்கு கிட்டிவிட்டதாகவே நான் நினைக்கிறேன்.

மகாதேஜஸ்வி (அதாவது விஷ்வாமித்ரர்) இவ்விதம் சொல்லிவிட்டு, பரம தார்மிகர்களும் மகாமேதாவிகளுமான புத்திரர்களை யாக உபகரணங்களை சம்பாதிப்பதற்காக நியமித்தார். சிஷ்யர்கள் எல்லோரையும் கூப்பிட்டு இந்த வாக்கியத்தை கூறினார், ‘குழந்தைகளே, ஸ்ருதிகளில் (அதாவது வேதங்களில்) நன்கு தேர்ச்சியடைந்தவர்களும், சிஷ்யர்களுடனும்-இஷ்டர்களுடனும் கூடினவர்களும், ரித்விஜர்களுடன் கூடினவர்களுமான ரிஷிகணங்கள் எல்லோரையும் என் ஆணையைக்கொண்டு அழைத்துவருவீர்களாக. என் வாக்கியத்தின் பலத்தைக்கொண்டு அழைக்கப்பட்ட எவராவது ஏதாவது நிந்தையுடன்கூடிய பதிலை சொல்வாராகில் அவ்விதம் சொல்லப்பட்டது எல்லாவற்றையும் ஒன்றும்விடாமல் என்னிடம் தெரிவிக்கத்தக்கது.

அவருடைய அந்த வார்த்தையை கேட்டு, (பல) தேசங்களுக்கு சென்றார்கள். எல்லா தேசங்களினின்றும் அவர் ஆணையின் காரணத்தாலேயே பிரம்மவாதிகள் (அதாவது வேதவித்துகள்) வந்துசேர்ந்தார்கள். அந்த சிஷ்யர்களும் ஜொலிக்கின்ற தேஜஸுடன் விளங்கும் முனியிடம் திரும்பிவந்துசேர்ந்து, அனைத்து பிரம்மவாதிகளுடைய வார்த்தை அனைத்தையுமே தெரிவித்தார்கள், ‘அனைத்து தேசங்களிலும் த்விஜர்கள் (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது) தம்முடைய வார்த்தையை கேட்டதுமே, ஒன்றாய் சேர்ந்து கூடினார்கள். மஹோதயரை தவிர எல்லோருமே வந்துவிட்டார்கள். வாசிஷ்டர்களான (அதாவது வசிஷ்ட புத்திரர்களான) அந்த நூறு பேர்களும் எல்லோரும் கோபத்தால் பொங்கி வந்த சொற்களையுடைய எந்த ஒரு பதிலை சொல்லிவிடுத்தார்களோ முனிபுங்கவரே! தாம் எல்லாவற்றையும் செவிமெடுப்பீராக, ‘எவனுக்கு, (அதிலும்) விசேஷமாக சண்டாளனுக்கு க்ஷத்ரியன் யாகம் செய்து வைப்பானோ அவனுடைய ஹவிஸ்ஸை (அதாவது யாகத்திலிருக்கும் பொருட்களை) சுரர்களும் (அதாவது தேவர்களும்), ரிஷிகளும் சதஸில் (அதாவது யாகசபையில்) எவ்விதம் புசிப்பார்கள்? பிராமணர்கள் மகாத்மாக்களென்றாலும், விஷ்வாமித்திரனாலே ரட்சிக்கப்பட்டவர்களாய் இருந்தாலும், சண்டாளனுடைய உணவை உண்டுவிட்டு எப்படி ஸ்வர்கம் செல்வார்கள்?’ முனிவர்களுள் புலியே, அந்த வாசிஷ்டர்கள் எல்லோரும் மஹோதயருடன் கூடினவர்களாய், மிகவும் ரத்தநிற கண்களுற்றவர்களாய், இவ்விதமான கடுமையான பதிலை சொல்லிவிடுத்தார்கள்.

முனிபுங்கவர் (அதாவது விஷ்வாமித்ரர்) அவர்கள் எல்லோருடைய கோபத்துடன் கூடிய அந்த வார்த்தையை கேட்டு, கோபத்தால் மிகவும் ரத்தநிற நயனங்களை உடையவராகி இவ்விதம் சொன்னார், ‘எந்த துராத்மாக்கள் குற்றமற்றவனும், உக்கிரமான தவத்தை கொண்டிருக்கிறவனுமான என்னை இகழ்கிறார்களோ அவர்கள், பொசுங்கி சாம்பலாக ஆகிவிடுவார்கள். சந்தேகமில்லை. அவர்கள் காலபாசத்தால் (அதாவது காலனின் பாசக்கயிற்றால்) இன்றே வைவஸ்வதனின் (அதாவது யமனின்) வீட்டை அடைந்தவர்களாய்,எழுநூறு ஜன்மம் எப்பொழுதும் சவமாமிசங்களை புசிப்பவர்களாயே ஆகட்டும். நாயிறைச்சியை நித்தமும் ஆகாரமாய் கொள்பவர்களாய், விசித்திரமானவைகளை செய்பவர்களாயும், விகாரரூபமுடையவர்களாயும், முஷ்டிகர்கள் (என்று) பெயர்கொண்ட கொடூரமானவர்களாய் இந்த உலகங்களில் அலையட்டும். துர்புத்தி கொண்ட மஹோதயனும் அவமதிக்கத்தகாத என்னை அவமதித்தான். ஆகையால், எல்லா உலகங்களிலும் இகழப்பட்டவனாய் நிஷாதத்தன்மையை அடைவான். என்னுடைய கோபத்தால் நெடுங்காலம் உயிர்களை கொல்வதே காரியமாயுடையவனாய், இரக்கம் இல்லாமையை அடைந்தவனாய் துர்கதியை அடைவான்.மகாதபஸ்வியும், மகாதேஜஸ்வியும், மகாமுனியுமான விஷ்வாமித்ரர் ரிஷிகளின் மத்தியில் இவ்வாறான வார்த்தையை சொல்லி ஓய்ந்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பத்தொன்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment