Thursday, April 2, 2020

ஐம்பத்திமூன்றாவது ஸர்க்கம் – ஷபலையைக் கொடுக்கப் பிரார்த்திப்பது


எதிரிகளை அழிப்பவரே (அதாவது ஸ்ரீராமா), மனதில் எண்ணியதெல்லாம் கொடுக்கவல்லதாகிய ஷபலா (அதாவது காமதேனு), வசிஷ்டரால் இப்படி சொல்லப்பட்டதாய், எப்படி எப்படி இஷ்டமோ, அப்படியாய் கரும்புரஸங்களையும், தேன்வகைகளையும், பொரிகளையும், மைரேய ரஸங்களையும் (அதாவது போதை பானங்களையும்), உயர்ந்த புஷ்பம், பழம் முதலிவைகளினின்று பிழிந்தெடுத்த ரஸங்களையும், மிக்க உயர்ந்த வேறு குடிக்கத்தக்க பானங்களையும், உயர்ந்தவையும் கீழ்ப்பட்டவைகளான தின்பண்டங்களையும் வேண்டியவைகளெல்லாம் அளித்தது. அங்கு வேண்டிய அளவு உஷ்ணமுள்ள அன்னத்தினுடைய குவியல்களும், பளபளபாக்கப்பட்ட அன்னங்களும், மலைகளுக்கு சமமான குழம்புவகைகளும் அவ்வண்ணமே தயிர்வகைகளும் மடுவுமடுவாய் விளங்கின. பற்பல இனிய ருசியுள்ள ரஸங்களையுடைய அவ்விதமாகவே ஆறுவகை ரஸங்களையுடையவும், பாத்திரங்களும், பூரணமான ருசிகரமாயிருக்கும் சர்க்கரைப்பலகாரங்களும் ஆயிரக்கணக்காய் விளங்கின.

மகிழ்வாலும், நிறைவாலும் (நிரம்பிய) ஜனங்களால் நிறைந்திருந்த விஷ்வாமித்ரரின் (சேனை)பலம் அனைத்தும் வசிஷ்டரால் அனைத்து (விதத்திலும்) அதிக சந்தோஷமுற்றதாய், அதிக திருப்தியடைந்ததாய் விளங்கிற்று. சிறந்த அந்தப்புர (பெண்களுடன்) இருந்தவரும், பிராமணர்களோடும்-புரோகிதர்களோடும் இருந்தவரும், ராஜரிஷியுமான விஷ்வாமித்ர ராஜா, அப்பொழுது முழுமையான மனக்களிப்புற்றவராய் ஆனார். ஆலோசகர்களுடன் இருந்தவரும், மந்திரிமார்களுடன் இருந்தவரும், பணியாட்களுடன் இருந்தவருமான அவர் பூஜிக்கப்பட்டவராய் அதனால் பரமானந்தத்துடன் விளங்குகிறவராகி, வசிஷ்டரிடம் இவ்வாறு சொன்னார், ‘வாக்கிய நுட்பமறிந்த பிராமணரே, பூஜிக்கப்படவேண்டிய தம்மால் நான் பூஜிக்கப்பட்டவனாய் மிகவும் கௌரவிக்கப்பட்டேன். (ஓர்) வாக்கியம் சொல்கிறேன், கேட்டருளவேண்டும். நூறாயிரம் (லட்சம்) பசுக்களைக்கொண்டு எனக்கு ஷபாலா (அதாவது காமதேனு) கொடுக்கப்படவேண்டும். பகவானே, த்விஜரே (த்விஜர் என்றால் இருபிறப்பாளன் என்று பொருள், முதல் பிறப்பு இயற்கையான முறையில் நிகழ்வது. இரண்டாம் பிறப்பு பரமாத்மாவை உணர்கையில் கிடைப்பது), அரசன் ஒருவன் தான் ரத்தினங்களை சேகரிப்பவன் (அதாவது ஒவ்வொரு விஷயத்திலும் சிறந்தது எதுவோ அதற்குரியவன்) (என்பது) தர்மவிதி. இது (அதாவது காமதேனு) ரத்தினமானது என்கிறபடியால் இது என்னுடையது. ஆகையால் ஷபாலாவை (அதாவது காமதேனுவை) எனக்கு தந்திடவேண்டும்.

இவ்விதமாய் விஷ்வாமித்ரரால் வேண்டப்பட்டவரும், முனிவர்களில் சிறந்தவரும், தர்மாத்மாவான வசிஷ்ட பகவான் வேந்தரைப்பார்த்து இவ்வாறு மறுமொழியுரைத்தார், ‘ராஜா, பசுக்கள் நூறாயிரம் சரி, நூறுகோடிகளானாலும் சரி, வெள்ளியின் குவியல்களானாலும் சரி முடியாது. நான் ஷபலையை (அதாவது காமதேனுவை) கொடுக்கமாட்டேன். எதிரிகளை வெல்பவரே, அறிஞரொருவனுக்கு கீர்த்தி (மட்டும்தான்) நிரந்தரம். அவ்வண்ணமே, இந்த ஷபலா (அதாவது காமதேனு) எனக்கு. என்னிடமிருந்து தியாகம் செய்வதற்கு ஏற்றதில்லை. ஹவ்யமும் (அதாவது தேவகாரியமும்), கவ்யமும் (அதாவது பித்ருகாரியமும்), அக்னிஹோத்ரமும், ஹோமமும் அவ்வண்ணமே பிராணா யாத்திரையும் ஆகியதும் இதனிடமே (அதாவது காமதேனுவிடமே) சார்ந்துள்ளது. ராஜரிஷியே, ஸ்வாஹாகாரம்-வஷட்காரம் (என்கிற மந்திரங்களும்), பலவகைகளான வித்யைகளும், இதனிடமே இதெல்லாம் சார்ந்துள்ளது. இதில் சந்தேகமில்லை. ராஜா, எக்காலத்திலும் பலவிதமான காரணங்களால் (காமதேனு) நிறைவை ஏற்படுத்துகிறது. இது எனக்கு எல்லாமுமாகிறது. சத்தியமாய் தமக்கு ஷபலையை நான் தரமாட்டேன்.

வசிஷ்டரால் இவ்விதம் சொல்லப்பட்டவரும், சொல்லில் சமர்த்தருமான விஷ்வாமித்ரரோ, அப்பொழுது மிக அதிகமான உணர்ச்சிவசப்பட்டு (பின்வரும்) வாக்கியத்தை சொன்னார், ‘தமக்கு பதிநான்காயிரம் யானைகளையும், தங்கமயமான இடுப்புக்கட்டு சங்கிலிகளையும்-கழுத்துச்சங்கிலிகள் உடையவைகளாயும், தங்க அங்குசங்களோடு விளங்குகிறவைகளாயும் கொடுக்கிறேன். பொன்மயங்களாயும், வெள்ளைக்குதிரைகள் கட்டினவைகளாயும், நாலு (குதிரைகள்) கட்டினவைகளாயும், நூற்றுக்கணக்கான கிங்கிணிகளால் (அதாவது சிறுமணிகளால்) அலங்கரிக்கப்பட்டவைகளுமான எண்ணூறு ரதங்களை தமக்கு தருகிறேன். நல்விரதமுடையவரே, பலதேசங்களில் உண்டானவைகளும், நற்குலங்களில் உண்டானவைகளும், மகாவேகசக்தியுடையவைகளுமான பதினாறாயிரம் குதிரைகளை தமக்கு கொடுக்கிறேன். பலவித வர்ண வகுப்புகளையுடையவைகளும், கன்றுகளையுடையவைகளுமான ஒரு கோடி பசுக்களை கொடுக்கிறேன். எனக்கு ஷபலாவை தந்துவிடும். த்விஜர்களில் உத்தமரே, ரத்தினமோ, பொன்னோ, (தாம்) இச்சிப்பது எதுவோ எவ்வளவோ அது அனைத்தையும் தமக்கு தருகிறேன். எனக்கு ஷபலாவை தந்துவிடும்.

இவ்விதம் புத்திமானான விஷ்வாமித்ரராலே சொல்லப்பட்டவராகிய பகவானோ இவ்வாறு கூறினார், ‘ராஜா, ஷபலாவை எப்படியாகிலும் நான் கொடேன். இதுவேதான் என்னுடைய ரத்தினம். இதுவேதான் என் தனம். இதுவேதான் எல்லாமும். இதுவேதான் (என்) உயிர். ராஜா, அமாவாசை காரியத்திற்கும், பெளர்ணமி காரியங்களுக்கும், ஏராளமான தட்சிணைகளுடன் விளங்கும் யாகங்களும், பலவித கிரியைகளும் எனக்கு இதுவே தான். ராஜா, என்னுடைய அனைத்து கிரியைகளுக்கும் இதுவே மூலமாயுள்ளது. சந்தேகமில்லை. பலவித வார்த்தைகளால் என்ன (ஆகப்போகிறது)? காமதோஹினியை (அதாவது காமதேனுவை) நான் கொடேன்.’”

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் ஐம்பத்திமூன்றாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment