Thursday, January 30, 2020

முப்பத்திநான்காவது ஸர்க்கம் – விஷ்வாமித்ரரின் பிறப்பு

(கௌஷிகி நதி என்று அன்று அறியப்பட்ட இன்றைய கோஷி நதி)

ராகவா, விவாகமான அந்த பிரம்மதத்தரும் (பொழுது) சென்றிட புத்திரன் இல்லாதவராய் ஆனார். புத்திரனையடைய புத்திரகாமேஷ்டியை செய்தார். யாகமும் நடந்தேறும் அத்தருணத்தில் பிரம்மபுத்திரரான, மிக கம்பீர சுபாவமுள்ள குஷன் மகீபதியான (அதாவது அரசரான) குஷநாபரைப்பார்த்து சொன்னார், ‘புத்திரா, உனக்கு உன்னைப்போன்ற மிக தார்மிகனான புத்திரன் உண்டாவான். காதி என்கிற அவனால் உலகத்தில் சாசுவதமான புகழையும் நீ பெறுவாய்.

(ஸ்ரீ)ராமா, மகீபதியான குஷநாபரிடம் இவ்விதம் சொல்லிவிட்டு, குஷன் ஆகாயத்துள் புகுந்து, சனாதனமான பிரம்மலோகத்திற்கு சென்றார். சில காலத்திற்கு பிறகு அறிஞரான குஷநாபருக்கு பெயரினால் காதி என்ற மிக்க தர்மிஷ்டர் பிறந்தார். காகுத்ஸ்தா (அதாவது ஸ்ரீராமா), அந்த பரம தார்மிகரான காதி எனக்குத் தந்தை. ரகுநந்தனா, குஷருடைய வம்சத்தில் பிறந்தவன் (ஆதலால்) கெளஷிகன் (என்று) ஆகிறேன். ராகவா, பெயரினால் சத்தியவதி என்று பிரசித்தமான நல் விரதமுடைய எனக்கும் முன் பிறந்த சகோதரி, ரிசீகரென்ற ரிஷிக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்கப்பட்டாள். கணவனை அனுசரித்தவள். சரீரத்தோடு கூடினவளாய் ஸ்வர்கத்தை அடைந்தாள். மிகக் கம்பீரமான கௌஷிகி என்ற மகாநதியாகவும் ஆனாள் (இன்றைய திபெத் மற்றும் நேபாளத்தில் ஓடும் கோஷி நதியே அன்றைய கௌஷிகி நதியாகும்). திவ்யையாய், புண்ணியதீர்த்தமுடையவளாய், ரமணீயமானவளாய், இமயமலையை அடைந்தவளான என்னுடைய உடன் பிறந்தவள் உலகத்திற்கு இதம், இன்பம் இவற்றின் பொருட்டு உண்டானவள்.

ரகுநந்தனா, அப்படியிருப்பதால் நான் உடன்பிறந்தவளான கௌஷிகியினிடத்தில் ஸ்நேகமுள்ளவனாய் இமயமலைச்சாரலிலே எப்பொழுதும் சுகமாய் வசித்துக்கொண்டிருக்கிறேன். புண்ணியமான, சத்தியத்தில் (மற்றும்) தர்மத்தில் நிலைநின்றவளான, பதிவிரதையான, மகாபாக்கியசாலியான அந்த சத்தியவதிதான் நதிகளுள் உத்தமமான கௌஷிகி. (ஸ்ரீ)ராமா, நான் நியமத்தால் அவளை விட்டு வந்தவன்; சித்தாசிரமத்தை அடைந்து, உன்னுடைய தேஜஸாலேயே சித்தியடைந்தவனாக ஆகிறேன். பெருங்கரம் கொண்டவனே, (ஸ்ரீ)ராமா, எதை நீர் என்னை கேட்கிறீரோ, இந்த என்னுடைய சொந்த வம்சத்தின் மற்றும் தேசத்தின் உற்பத்தி (வரலாறு) சொல்லப்பட்டது. காகுத்ஸ்தா, நான் கதைகளை சொல்லிக்கொண்டிருக்க பாதி இரவு ஆகிவிட்டது. உறக்கத்தை அடை. உமக்கு மங்கலம். இந்த மார்க்கத்தில் நமக்கு தடை ஆகவேண்டாம்.

ரகுநந்தனா, மரங்கள் எல்லாம் அசைவற்றவைகளாய் இருக்கின்றன. மிருகங்களும், பறவைகளும் அடங்கித் தூங்குகிறவைகளாய் இருக்கின்றன. திசைகளும் இரவின் இருளால் மூடப்பட்டவைகளாய் இருக்கின்றன. இரவின் பூர்வபாகம் மெள்ள விடப்படுகிறது. நட்சத்திரங்கள், விண்மீன்கள் இவைகள் அடர்ந்த ஆகாயம், ஜொலிக்கின்ற கண்களாலே நிரம்பியது போல் விளங்குகிறது. அழகியவனே, குளிர்ச்சியான கிரணங்களையுடைய, உலகத்து இருளை ஒழிக்கிற ஷஷியும் (அதாவது சந்திரனும்), உலகத்தில் பிராணிகளுடைய மனங்களை காந்தியால் சந்தோஷப்படுத்துபவனாய் உதிக்கிறான். இரவில் சஞ்சரிக்கின்ற எல்லா உயிரினங்களும், யட்ச ராட்சச சமூகங்களும், ரௌத்திரர்களான பச்சை மாமிச உண்ணிகளும் அங்கங்கே திரிகின்றன.

இவ்வாறு சொல்லி, மகாதேஜஸ்வியான மகாமுனி வாய் மூடினார். ரிஷிகள் எல்லோரும் நல்லது, நல்லதுஎன்று அவரை பூஜித்தனர். இந்த குஷிகர்களுடைய வம்சம் எப்பொழுதும் மகத்தானது. தர்மத்தில் ஊக்கமுள்ளது. குஷிகவம்சத்தில் பிறந்தவர்கள் நரோத்தமர்கள். பிரம்மாவிற்கு ஒப்பானவர்கள். மகாத்மாக்கள். விஷ்வாமித்ரரான தாமே மிகவும் புகழ்பெற்றவர். விசேஷமாய் நதிகளில் சிறந்த கௌஷிகியும் உம்முடைய குலத்தை விளங்கச் செய்கிறவள்.இவ்வாறு அந்த முனிவர்களுள் புலியைப்போன்றவர்களால் புகழப்பட்ட ஸ்ரீமான் விஷ்வாமித்ரர் அஸ்தமனத்தை அடைந்த அம்ஷுமானை (அதாவது சூர்யனை) போல் நித்திரையை அடைந்தார். சௌமித்ரரோடு (அதாவது லக்ஷ்மணரோடு) கூடின (ஸ்ரீ)ராமரும் புலியைப்போன்ற அந்த முனிவரை கொஞ்சம் கொண்டாடி, களிப்படைந்தவராய் நித்திரையை நன்கடைந்தார்.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பத்திநான்காவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment