Friday, January 17, 2020

முப்பதாவது ஸர்க்கம் – யாக ரக்ஷை



இடம் காலம் அறிந்த, எதிரிகளை அழிக்கிற, பேச்சில் வல்லவர்களான ராஜபுத்திரர்களான அவ்விருவர்களும் (தகுந்த) இடத்தில், (தகுந்த) காலத்தில் கெளஷிகரைப் (அதாவது விஷ்வாமித்ரரைப்) பார்த்து அப்படியே சொல்லினை சொன்னார்கள், ‘பகவானே, பிராமணரே, எந்த காலத்தில் இரவில் நடமாடுபவர்கள் (அதாவது ராட்சசர்கள்) இருவர்களும் தடுக்கப்படவேண்டியவர்களோ அந்த க்ஷணத்தை (பற்றி) தாமதமின்றி கேட்க விரும்புகிறோம்.

இவ்விதம் சொல்லுகிற யுத்தத்தின் ஊக்கத்தோடு துடித்துக்கொண்டிருக்கிற காகுத்ஸ்தர்களான அரசகுமாரர்களிருவரைப் பார்த்து அந்த முனிவர்கள் எல்லோரும் மகிழ்ந்தவர்களாய் பதிலுரைத்தனர், ‘இந்த முனிவர் (அதாவது விஷ்வாமித்ரர்) தீக்ஷையை அடையப்போகிறார். மெளனவிரதத்தை அடைந்திருக்கிறார். ஆதலால் ராகவர்களான இருவர்களும் இன்றுமுதல் ஆறு இரவுகள் ரட்சிக்க வேண்டும்.

புகழ்பெற்ற அவ்விரண்டு ராஜபுத்திரர்களும் அவர்களின் வார்த்தையை கேட்டு, ஆறுநாட்கள் இரவும், பகலும் உறக்கமில்லாதவர்களாய் தபோவனத்தை ரட்சித்தார்கள். விழிப்பானவர்களான, பெரும் வில்லேந்தியவர்களான, எதிரிகளை அழிப்பவர்களான வீரர்களிருவர்கள் காவல் செய்தார்கள். விஷ்வாமித்ரரை ரட்சித்தார்கள். இப்படி காலம்சென்ற பின் அந்த ஆறாவது நாள் வந்தவளவில் (ஸ்ரீ)ராமர் செளமித்ரரைப் (அதாவது லக்ஷ்மணரைப்) பார்த்து விழிப்பாய் உறுதியாய் இரு(என்று) சொன்னார்.

யுத்தத்திற்கு ஊக்கத்தோடு துடித்துக்கொண்டிருக்கிற (ஸ்ரீ)ராமர் இவ்வாறு சொல்லுகையில் அவ்விடத்தில் உபாத்யாயர், புரோகிதர்களோடு கூடின யாககுண்டம் கொழுந்துவிட்டெறிந்தது. தர்ப்பைப்புல், பானங்கள் (தாங்கும்) பாத்திரம், யாக அகப்பைக்கள் இவைகளோடு கூடின, சமித்து (விறகுகள்), பூக்கள் இவைகளின் சமூகங்களோடுகூடிய, விஷ்வாமித்ரரோடு கூடிய, ரித்விஜர்களோடு கூடிய யாககுண்டம் ஜொலித்தது. இந்த யாகம் மந்திரபூர்வகமாயும், நியாயப்படியும் நடக்கிறது. ஆகாயத்தில் பெரிய பயங்கரமான சப்தமானது உண்டாயிற்று. நல்ல மழைக்காலத்தில் ஆகாயத்தை மறைத்து கிளம்பின மேகம் எப்படியோ, அப்படியே மாயத்தோற்றத்தை செய்கின்ற ராட்சசர்களிருவர் எதிர் ஓடிவந்தனர்.

மாரீசனும், சுபாஹுவும் அவ்வாறே அவ்விருவர்களுடைய கூட்டாளிகளும் வந்து பயங்கரங்களான ரத்த வெள்ளங்களை சொரிந்தார்கள். அந்த ரத்தவெள்ளத்தால் அணிசெய்யப்பட்ட அந்த யாகமேடை பிரகாசித்தது. யாகமேடை அப்படி இருப்பதை பார்த்து ராகவரான கோபமடைந்த (ஸ்ரீ)ராமர் வேகமாய் எதிர்நோக்கி ஓடுபவராய் அப்பொழுது அவ்விருவர்களை ஆகாயத்தில் பார்த்தார். செந்தாமரைக்கண்ணனான (ஸ்ரீ)ராமர், வேகமாய் பூமியில் இறங்குகிற அவ்விருவர்களை கண்டு, உடனே அப்பால் லக்ஷ்மணரை பார்த்து, இந்த வார்த்தையை சொன்னார், ‘லக்ஷ்மணா, துர்நடத்தையுடைய (பச்சை) மாமிசத்தை புசிக்கும் ராட்சசர்களை, காற்றால் மேகங்களைப்போல் மானவாஸ்திரத்தால் ஒடுக்கிவிடப்பட்டவர்களாக பார்.

வெகுகோபம் மூண்ட ராகவர் அதிக கம்பீரமான, அதிக பிரகாசமுள்ள மானவ அஸ்திரத்தை மாரீசன் மார்பில் விடுத்தார். அந்த மானவமென்கிற சிறந்த அஸ்திரத்தால் அடிக்கப்பட்ட அவன் சமுத்திரநீரால் நிறைந்த நூறு யோஜனை (தூரம்) தள்ளிவிடப்பட்டான். ஒன்றும் தெரியாமல்  நினைவிழந்த, நீரில் முழுகுகிற, குளிர்ந்த பாணத்தின் முகத்தால் அடிக்கப்பட்ட, தூக்கியடிக்கப்பட்ட மாரீசனை பார்த்து, (ஸ்ரீ)ராமர் லக்ஷ்மணருக்கு பின்வருமாறு சொன்னார்கள், ‘லக்ஷ்மணா, குளிர்ந்த பாணமான தர்மமுள்ள மானவாஸ்திரத்தை பார். இவன் புத்தியை மயக்கி கொண்டுப்போகிறது. உயிரை எடுக்கவில்லை. தயையற்ற துஷ்டநடத்தையுள்ள, பாவகர்மத்தை புரிபவர்களான, யாகத்திற்கு இடையூறு செய்கிற, ரத்தத்தை குடிப்பவர்களான இந்த ராட்சசர்களையும் வதைக்கப்போகிறேன்.

இவ்வாறு லக்ஷ்மணரைப் பார்த்து சொல்லி, அப்பால் (ஸ்ரீ)ராமர் நொடியிலேயே லாகவத்தை காண்பிப்பவராகவே திவ்யமான, அற்புதமான ஆக்னேய அஸ்திரத்தை கைப்பற்றி சுபாஹுவின் மார்பில் விடுத்தார். அவன் அடிக்கப்பட்டவனாய் பூமியில் விழுந்தான். பெரும்புகழ் பெற்றவரான, மிக கம்பீரமான ராகவர் முனிவர்களுக்கு சந்தோஷத்தை செய்பவராய் வாயவ்யாஸ்திரத்தை எடுத்து மீதி இருப்போரை கொன்றார். அந்த ரகுநந்தனர் யாகத்திற்கு இடையூறுசெய்கிற எல்லா ராட்சசர்களை கொன்று, முற்காலத்தில் வெற்றிபெற்ற இந்திரன்போல் அங்கு ரிஷிகளால் பூஜிக்கப்பட்டார். யாகம் முடிந்தவளவில் மகாமுனியான விஷ்வாமித்ரர் திசைகள் அனைத்தும் மங்கலமானவைகளாக கண்டு, காகுத்ஸ்தரிடம் இதை சொன்னார், ‘பெருங்கரம் கொண்டவனே, பெரும்புகழ் பெற்றவனே, (ஸ்ரீ)ராமா, ஏற்றுக்கொண்ட காரியத்தை செய்தவனாக ஆனேன். உன்னால் குருவின் வார்த்தை செய்யப்பட்டது. இந்த சித்தாசிரமம் சத்தியமாய் செய்யப்பட்டது.(ஸ்ரீ)ராமரை அவர் இவ்விதம் புகழ்ந்து அவர்களோடு சந்தியை சேவித்தார் (சந்தியாவந்தனம் செய்தார்).

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் முப்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||

2 comments:

  1. I doubt about the availability of Complete Tamil translation present online. There are lot sources available of Sanskrit-English translation.

    ReplyDelete