Sunday, December 29, 2019

பதினேழாவது ஸர்க்கம் – கரடிகள், வானரங்கள் முதலியவர்களின் உற்பத்தி



நல் மகாத்மாவான இந்த ராஜாவிற்கு (அதாவது தசரதருக்கு) புத்திரத்துவத்தை விஷ்ணுவே அடைந்தவளவில் பகவானான சுயம்பு (அதாவது பிரம்மா), தேவதாக்கள் எல்லோரையும் பார்த்து இதை சொன்னார், ‘சத்தியசந்தரான, வீரரான நம் எல்லோருடைய நன்மையைக்கோருகிற விஷ்ணுவிற்கு வலுவுடைய, வேண்டியபடி வடிவம் கொள்ளவல்ல சகாயகர்களை உண்டாக்கக்கடவீர்கள். மாயைகளை அறிந்த, சூரர்களான, வேகத்தில் வாயு வேகத்திற்கு ஒப்பான, நீதிகளையுணர்ந்த, புத்திமான்களான, விஷ்ணுவிற்கு சமமான பராக்கிரமமுள்ள, வதைக்கப்படக்கூடாத, உபாயங்களை அறிந்த, திவ்யமான சரீரங்களை உடைய, அனைத்து அஸ்திரங்களின் சக்தியை அடைந்த, அமிர்தம் உண்டவர்கள் போலிருக்கிற ஹரி (அதாவது வானர) ரூபத்தோடு தக்க பராக்கிரமமுள்ள புத்திரர்களையே முக்கிய அப்சரஸ்களிடத்திலும், கந்தர்வ பெண்களுடைய சரீரங்களிலும், யட்ச (மற்றும்) பன்னக (அதாவது நாக) கன்னிகைகளிடத்திலும், கரடி (மற்றும்) வித்யாதர பெண்களிடத்திலும், கின்னர ஸ்திரிகளுடைய சரீரங்களிலும், வானர ஸ்திரிகளுடைய சரீரங்களிலும் உண்டாக்கக்கடவீர்கள். இதற்கு முன்னொரு காலத்தில் என்னால் கரடிவேந்தனான ஜாம்பவான் ஸ்ருஷ்டிக்கப்பட்டவனாய், திடீரென கொட்டாய் விடுகிற என்னுடைய வாயிலிருந்து உண்டானான்.

பகவானாலே (அதாவது பிரம்மாவாலே) அவ்விதமாய் சொல்லப்பட்ட அவர்கள் அந்த சாசனத்தை அங்கீகரித்து, வானரரூபங்கொண்ட புத்திரர்களை அவர்கள் இவ்வாறாய் ஜனித்தார்கள். மகாத்மாக்களான ரிஷிகளும், சித்தர்களும், வித்யாதரர்களும், உரகர்களும் (அதாவது நாகர்களும்), சாரணர்களும் வீரர்களான வனத்தில் சஞ்சரிக்கிற புத்திரர்களை சிருஷ்டித்தார்கள்.

இந்திரன் மகாபாக்கியசாலியான, வலிமைமிக்க, வானரேந்திரனான வாலியையும், தகிக்கும் சிறந்த தபனன் (அதாவது சூர்யன்) சுக்ரீவனையும் உண்டாக்கினர். (தேவகுருவான) ப்ருஹஸ்பதி தாரன் எனும் பெயர்கொண்ட மகாகுரங்கை உண்டுபண்ணினார். குபேரனுடைய புதல்வன், ஸ்ரீமானான கந்தமாதனன் என்ற வானரன். அனைத்து வானர முக்கியர்களுள் ஒப்பில்லாத, புத்தினுண்மையுள்ள நளன் என்ற மகா வானரரை விஷ்வகர்மா உண்டுபண்ணினார். பாவகனுடைய (அதாவது அக்னியுடைய) புதல்வனான, ஸ்ரீமானான, அக்னியைப்போன்று ஒளிர்கிற நீலன் தேஜஸ்ஸால், புகழால், வீர்யத்தால் வானரர்களை அதிசயித்திருந்தான். ரூபத்தை செல்வமாய் பெற்ற, ரூபத்திற்கு பிரசித்தர்களான அஷ்வினி தேவர்கள் மைந்தனையும், த்விவிதனையும் தாமே உண்டாக்கினார்கள். வருணன் என்ற வானரரை உண்டுபண்ணினார். பர்ஜன்யனும் மகாபலசாலியான ஷரபனை உண்டுச்செய்தார். அனைத்து வானர முக்கியர்களில் புத்திமானும், பலவானுமான ஹனுமான் என்ற பெயர்கொண்ட ஸ்ரீமானான வானரர் மாருதருடைய (அதாவது வாயுவுடைய) குமாரர். வஜ்ரத்திற்கு ஒப்பான சரீரமுள்ள, வேகத்தில் வைனதேயனுக்கு (அதாவது கருடனுக்கு) சமமான சூர்யனன் என்ற பலவானான வானரன் பிரபுவான ருத்திரனுடைய புத்திரர்.

பத்துக்கழுத்தையுடையவனின் வதத்தில் திடமானவர்களான, அளவிடமுடியாத பலமுள்ள வீரர்களான, பராக்கிரமசாலிகளான, வேண்டிய வடிவம்கொள்ள வல்லவர்களான, பல ஆயிரக்கணக்கான அவர்கள் சிருஷ்டிக்கப்பட்டார்கள். அந்த கரடிகள், வானரர்கள், கோபுச்சர்கள் (அதாவது லாங்கூர் இன குரங்குகளாக இருக்கலாம்), யானைகள், மலைகள் போலொத்த வியத்தகு சரீரமமைந்த மகாபலசாலிகளாய் சீக்கிரத்திலேயே உண்டானார்கள். எந்த தேவருக்கு எந்த உருவம் எந்த வேடம் பராக்கிரமமோ அவருக்கு அவருடைய புதல்வர் தனியாய், அவரோடு சமானராய் உண்டானார். பிரசித்தமான பராக்கிரமமுள்ள சில வானரர்கள் கோலாங்கூல (அதாவது லாங்கூர் இன குரங்காக இருக்கலாம்) பெண்களிடம் உற்பத்தியானார்கள். அதுபோலவே ரிக்ஷீகளிடமும் (அதாவது பெண் கரடிகளிடமும்), கின்னரிகளிடமும் உண்டானார்கள். அந்த சமயத்தில் புகழ்பெற்ற, சந்தோஷமுடையவர்களான அநேக தேவர்கள், மகரிஷிகள், கந்தர்வர்கள், கழுகுகள், யட்சர்கள், நாகர்கள், கிம்புருஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், உரகர்கள், பெரிய நல்வடிவமுள்ள, வனத்தில் சஞ்சரிக்கிற வானரர்கள் எல்லோரையும் முக்கியர்களான அப்சரஸ்களிடத்திலும், அப்படியே வித்யாதரப் பெண்களிடமும், நாக கன்னிகைகளிடமும், அப்படியே கந்தர்வ பெண்களுடைய சரீரங்களிலேயும் ஆயிரக்கணக்கான உண்டுபண்ணினார்கள். வேண்டியபடி வடிவம் கொள்ள பலமுள்ளவர்கள், விருப்பப்படி சஞ்சரிக்கிறவர்கள், கர்வத்தாலும், பலத்தாலும் சிங்கங்களுக்கும், புலிகளுக்கும் ஒப்பானவர்கள்.

எல்லோரும் மலைகளைப் பிடுங்கி மேலேறிய வல்லவர்கள். எல்லோரும் மரங்களை களைந்தெடுத்துக்கொண்டு போர்புரிய வல்லவர்கள். எல்லோரும் நகங்களையும், பற்களையும் கொண்டு யுத்தம் செய்பவர்கள். எல்லோரும் அனைத்து அஸ்திரங்களையும் அறிந்தவர்கள். மலைகளை அசைப்பார்கள். ஸ்திரமான மரங்களை பிளப்பார்கள். வேகத்தால் நதிகளுக்கு பதியான சமுத்திரத்தையும் கலக்குவார்கள். பூமியை பாதத்தால் சிதறடிப்பார்கள். பெருங்கடலை தாண்டுவார்கள். ஆகாயப் பிரதேசத்தையும் பிரவேசிப்பார்கள். மழைமேகங்களையும் பிடிப்பார்கள். காட்டில் வேகமாய்த்திரிகிற மதங்கொண்ட யானைகளையும் பிடிப்பார்கள். கர்ஜனை செய்யும் நாதத்தாலே பறவைகளை கீழே தள்ளுவார்கள். இப்படிப்பட்ட வேண்டியபடி வடிவம் கொள்ளவல்ல, மகாத்மாக்களான வானரர்களுடைய நூறாயிரங்களும் (அதாவது லட்சமும்), சேனைத்தலைவர்களுடைய நூறும் பிறந்தன.

அந்த வானரசேனைத்தலைவர்கள் வானரர்களின் பிரதானமான சேனல்களில் சேனைத்தலைவர்களில் சிறந்தோர்களாக ஆனார்கள். வீரர்களான வானரர்களையும் உண்டுபண்ணினார்கள். இவர்கள் ரிக்ஷவான் எனும் மலையினுடைய (ரிக்ஷ மலை என்பது இன்றைய இந்தியாவின் மத்தியில் உள்ள மலைத்தொடராக கருதப்படுகிறது) தாழ்வரைகளை ஆயிரக்கணக்காக அடைந்தார்கள். பிறர்கள் விதவிதமான மலைகளிலும், கானகங்களிலும் குடிபுகுந்தார்கள். அந்த வானரேஸ்வரர்கள் எல்லோருமே சகோதரர்களான சூர்யபுத்திரரான சுக்ரீவரையும், ஷக்ரபுத்திரரான (அதாவது இந்திரபுத்திரரான) வாலியையும், நளனையும், நீலனையும், ஹனுமானையும் பிற வானர சேனைத்தலைவர்களையும் சார்ந்திருந்தார்கள். கழுகின் பலத்திற்கு ஒப்பானவர்களாய், யுத்தத்தில் சமர்த்தர்களாய் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் அவர்கள் எல்லோரும் கர்வத்தினால் சிங்கங்களையும், புலிகளையும், மகா சர்பங்களையும் நசுக்கினார்கள். அந்த கரடிகள், கோபுச்சர்கள், வானரர்கள் எல்லோரையும் பெருங்கரமுடைய, வெகு பராக்கிரமசாலியான வாலீ புஜவீர்யத்தால் ரட்சித்தான். விதவிதமான வடிவமுள்ள, பலவகை அடையாளங்களுள்ள அந்த சூரர்களால் மலைகள், காடுகள், சமுத்திரங்களால் நிரம்பிய இந்த பூமி நிறையப்பெற்றது. மேகக்கூட்டங்களுக்கும், மலைச்சிகரங்களுக்கும் ஒப்பான, மகா  பலசாலியான, பயங்கரமான சரீரரூபம் பெற்ற அந்த வானரசேனைத்தலைவர்களால் பூமி (ஸ்ரீ)ராமருக்கு சகாயம் செய்யும் பொருட்டு சூழப்பட்டதாக ஆனது.

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் பால காண்டத்தின் பதினேழாவது ஸர்க்கம் முற்றிற்று ||

No comments:

Post a Comment