Wednesday, July 1, 2020

பதினோராவது ஸர்க்கம் – இரண்டுவரங்களை கேட்பது


கைகேயி மன்மதபாணங்களால் தாக்குண்டவரும், காமவேகத்தால் வசப்பட்டிருப்பவருமான அந்த பூமியை பரிபாலிப்பவரிடம் கடுமையான வார்த்தையை சொன்னாள், ‘தேவரே! தாக்கப்பட்டவள் இல்லை. ஒருவராலும் அவமதிப்படைந்தவளும் இல்லை. எனக்கு ஓர் விருப்பம் உள்ளது. உம்மாலேயே செய்யவேண்டியதாகிய அதை இச்சிக்கிறேன். தாம் (அதனை) செய்திட இச்சைகொள்வதானால், (‘கேட்டதை அளிக்கிறேன்என்கிற) பிரதிக்ஞையை அங்கீகரிக்கக்கடவீர். அதன்மேல், எனது அபிப்பிராயம் எதுவோ அதை சொல்வேன்.

 

மகாதேஜஸ்வியும், காமம் கொண்டவருமான அவர் (அதாவது தசரதர்) சிறிது புன்னகைகொண்டு, கரத்தால் கைகேயியின் தலைமுடியை தடவிக்கொடுத்து, தூய்மையான புன்னைகையுடன் அவளிடம் மொழிந்தார், ‘கர்வங்கொண்டவளே! எனக்கு உன்னினும் பிரியமானவள் இல்லையென்பதையும், மானுடப்புலியான (ஸ்ரீ)ராமனினும் (மேம்பட்ட) பிற மனிதனும் இல்லையென்பதையும் அறிவாய். எவராலும் வெல்லமுடியாதவனும், மகாத்மாவானவனும், முக்கியனும், (எனது) ஜீவனுக்கு ஆதாரமானவனுமாகிய அந்த ராகவனின்மேல் உனக்கு உறுதியளிக்கிறேன். மனதில் இச்சைக்கொண்டிருப்பது எதோ அதை சொல்வாயாக. எவனை (ஓர்) முகூர்த்தமெனும் காணாவிடில் நான் நிச்சயமாய் உயிர் வைத்திரேனோ அந்த (ஸ்ரீ)ராமன்மீது கைகேயி! உன்னுடைய வார்த்தையை செய்கிறேன் (என்று) உறுதியளிக்கிறேன். என்னினும் அல்லது குழந்தைகளினும், பிறர்களினும் எவனை மானுடக்காளையாய் விரும்புகிறேனோ அந்த (ஸ்ரீ)ராமன்மேல் கைகேயி! உன்னுடைய வார்த்தையை செய்கிறேன் (என்று) உறுதியளிக்கிறேன். மங்கலமானவளே! எனது இதயத்தை ஸ்பரிசத்தால் எழுப்புவாயாக. இதை நன்கு கவனித்து கைகேயி! மனதிலிருப்பது எதுவோ அதை சொல்வாயாக. என் மீது (உனக்குள்ள செல்வாக்கு) பலத்தை அறிந்த நீ என்னிடத்தில் ஐயப்படலாகாது. உனது பிரீதியை (நான்) செய்கிறேன். நற்செயல்கள் மேல் உனக்கு உறுதியளிக்கிறேன்.

 

தனது வளத்திலேயே மனதை வைத்திருந்த அந்த தேவி (மனதிற்கு) வந்த (அந்த) அபிப்பிராயத்தை மகிழ்வுடனும், நடுநிலையற்றும், துர்வசனமாகிய (அந்த) வார்த்தையை அவரிடம் கூறினாள். அந்த (தசரதரின்) வாக்கியத்தாலே களிப்புற்ற அவள் தனது அபிப்பிராயத்திற்கு இணங்கிவிட்ட அவரிடம் மகாகோரமான மரணத்திற்கு இணையான (வார்த்தையை) மொழிந்தாள், ‘உறுதியளித்திருக்கிறீர். அதன் பயனாய் எனக்கு எந்த வரத்தை அளிக்கின்றீரோ, (அதை) அந்த இந்திரன் முன்னிட்ட முப்பத்துமூன்று தேவர்களும், சந்திரனும்-ஆதித்யனும், ஆகாயமும், கிரகங்களும், இரவும்-பகலும், திசைகளும், ஜகமும், கந்தர்வர்களும், ராட்சசர்களோடு கூடிய இந்த பூமியும் கேட்கட்டும். வீடுகளில் இரவில் திரிகின்ற பூதங்களும், இல்ல தேவதைகளும், மற்றுமுள்ள பூதங்கள் எவைகளோ அவைகளும், உம்முடைய சொல்லை அறிந்திருக்கக்கடவர்கள். சத்தியசந்தரும், மகாதேஜஸ்வியும், தர்மமறிந்தவரும், நல் சமநிலை கொண்டவருமான இவர் எனக்கு வரத்தை அளிக்கின்றார். அதை எனக்காக தேவதைகள் கேட்கக்கடவர்கள்.

 

(அந்த) தேவி காமத்தால் மோகிக்கப்பட்டவராயும், வரம் தருபவராயும் (இருந்த அந்த) மகாவில்லாளியான (அவரை) (தன்) பிடியில் கொண்டுவந்து, இவ்விதம் வாக்குக்கொடுத்தவராய், அதன்மேல் மிகவும் (முக்கிய வார்த்தையை) இவ்விதம் கூறினாள், ‘ராஜா! தேவ-அசுரர்களிடையே (நடந்த) அந்த யுத்தத்தில் முன்பு நடந்ததை நினைத்துப் பாரும். அங்கு, எதிரி கிட்டத்தட்ட உம்முடைய ஜீவனையே நிலைகுலையைச் செய்தான். தேவரே! அப்பொழுது என்னாலேயே தாம் ரட்சிக்கப்பட்டீர்.  கண் இமையாதவளாய் பாடுபட்ட எனக்கு அப்பொழுதே இரண்டு வரங்களை தந்தருளினீர். உலகை பரிபாலிப்பவரும், சத்தியத்திற்கு உண்மையாய் இருப்பவருமாகிய தேவரே! கொடுக்கப்பட்டவைகளும் உமதருகே சேர்ப்பிக்கப்பட்டவைகளுமான அந்த இரு வரங்களையே நான் இப்பொழுது துரத்துகிறேன். ஆகையால் தர்மப்படி வாக்களித்துவிட்டு, எனது வரத்தை கொடாமல் போவீர் என்றால் இப்பொழுதே உம்மால் அவமதிக்கப்பட்டவளாய் உயிரை விட்டுவிடுவேன்.

 

கைகேயியின் வார்த்தைகளால் அப்பொழுது ராஜா தன்வசத்தில் செய்யப்பட்டவராய், (ஓர்) மான் தனது அழிவின்பொருட்டு வலையில் எவ்வண்ணமோ அவ்வண்ணமே வீழ்ந்தார். அதன்மேல் காமத்தால் மோகிக்கப்பட்டவராய், வரமளிப்பவரான (அவரிடம்) இவ்விதம் சொன்னாள், ‘பூமிபாலரே! தேவரே! அப்பொழுது உம்மால் எனக்கு கொடுக்கப்பட்ட வரங்கள் எந்த இரண்டோ அவ்விரண்டை மாத்திரமே இப்பொழுது நான் கேட்கிறேன். எனது வார்த்தைக்கு செவிமெடுப்பீராக. ராகவனுக்கு அபிஷேக பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் என் பரதன் அபிஷேகிக்கப்பட்டு பட்டாபிஷேகம் செய்விக்கப்படட்டும். தேவரே! அப்பொழுது தேவ-அசுர யுத்தத்தில் என்னிடம் பிரீதியால் உம்மால் இரண்டாவது வரமாக எது கொடுக்கப்பட்டதோ அதற்கு காலம் இதோ வந்துவிட்டது. (ஸ்ரீ)ராமன் ஒன்பது-ஐந்து கூடிய (பதினான்கு) வருடங்கள் கந்தல் உடையோடு, கிருஷ்ணாஜினம் (எனும் மான்தோல்) மற்றும் சடை தரித்த தபஸ்வியாக தண்டகாரண்யத்தில் வாசம் செய்பவனாக இருக்கட்டும். கொடுக்கப்பட்ட வரத்தைத்தான் இப்பொழுது கேட்கிறேன். இப்பொழுதே ராகவனை வனத்திற்கு செல்பவனாக பார்க்கவேண்டும். இதுதான் எனக்கு மேலான விருப்பமாகும். பரதனின் யுவராஜ்ய (பட்டாபிஷேகத்தை) இடையூறற்றதாய் அடையட்டும். ராஜராஜராகிய தாம் சத்தியத்திற்கு உண்மையே இரும். குலத்தையும், குணத்தையும், பிறப்பையும் ரட்சித்துக்கொள்ளும். மானுடர்க்கு பரலோக வாசத்தில் சத்தியம் தவறாமை மிகுந்த நலம் (பயப்பதாக) தபோதனர்கள் (அதாவது மகரிஷிகள்) கூறுகின்றார்கள்.’”

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் பதினோராவது ஸர்க்கம் முற்றிற்று ||

Monday, June 29, 2020

பத்தாவது ஸர்க்கம் – கைகேயியை சமாதானம் செய்வது


பாவியான கூனியால் தேவி (கைகேயி) மிகவும் (விபரீதமாய்) தூண்டிவிடப்பட்டாளே, அப்போதிலிருந்தே அவள் நஞ்சு தடவிய அம்பினால் அடியுண்ட கின்னரி போல் (கின்னரிகள் என்பவர்கள் தேவலோக இசை கலைஞர்கள், தலையிலிருந்து-இடுப்பு வரை மனித உருவும், இடுப்பிலிருந்து-கால் வரை பறவை உருவொடும் இருப்பர் என்ற சுட்டிக்காட்டப்படுகிறது) பூமியில் கிடந்தாள். அழகியும், சாமர்த்தியசாலியுமான அவள் செய்யவேண்டியதை மனதிற்குள்ளேயே நிச்சயித்து, ‘யாவும் நன்கேஎன்று மந்தரைக்கு மெல்ல சொன்னாள். அழகியான அவள், மந்தரையின் வாக்கியத்தில் மோகித்தவளாய், நிச்சயம் செய்துவிட்டு, மேலும் மனத்தளர்வுற்றவளாய் நாககன்னிகை போல் உஷ்ணமாக பெரு மூச்செறிந்து, ஆத்மசுகத்திற்கான மார்கத்தை முகூர்த்தநேரம் (அதாவது சிறிதுநேரம்) சிந்தித்தாள்.

 

அன்புவைத்தவளும், (தனது) வளத்திலேயே விருப்பமுடையவளான அந்த மந்தரா, அந்த திருநிச்சயத்தை செவியுற்று, (எடுத்த காரியம்) சித்தி பெற்றது போல் மிகவும் மகிழ்ந்தவளாய் ஆனாள். அந்த தேவியும், திருநிச்சயத்தை நன்றாய் செய்துகொண்டு, கோபம் கொண்ட அபலையாகி, புருவங்களை முகத்தில் நெறுத்தி வைத்து, (வெறும்) பூமியில் படுத்துக்கிடந்தாள். கைகேயியால் களைந்தெறியப்பட்ட அந்த பலவகையான மாலைகளும், திவ்யமான ஆபரணங்களும் அப்பொழுது பூமியை அடைந்திருந்தன. அவளால் களைந்தெறியப்பட்ட அந்த மாலைகளும், ஆபரணங்களும் ஆகாயத்தை நட்சத்திரங்கள் எவ்வண்ணமோ அவ்வண்ணமே தரையை ஒளிபெறச்செய்தன. கோபமனையில் (அதாவது கோபமாக இருக்கும்போது வசிக்கும் இல்லத்தில்) அழுக்கடைந்த ஆடையுடுத்தியவளாய், தலைமுடியை ஒரேமுடியாய் திடமாய் கட்டிக்கொண்டு, விழுந்துகிடந்தவளான அவள் மாண்ட கின்னரியை போல் விளங்கினாள்.

 

மகாராஜாவோ ராகவரது பட்டாபிஷேகத்தை ஆணையிட்டுவிட்டு, சபையிலிருந்து விடைபெற்று, அரண்மனைக்குள் பிரவேசித்தார். கட்டுப்பாட்டாளர் (அதாவது மன்னர்) (ஸ்ரீ)ராமரது அபிஷேகம் இப்பொழுதுதான் பிரசித்தியானது என்று எண்ணியவராய், (தனது) பிரியத்திற்கு பாத்திரமானவளுக்கு (அந்த) பிரிய (செய்தியை) அறிவிக்க அந்தப்புரத்திற்குள் நுழைந்தார். பெரும் புகழ்பெற்ற அவர், கிளிகளும்-மயில்களும் நிறையப்பெற்றதும், க்ரௌஞ்ச (பறவைகள் மற்றும்) அன்னப்பறவைகளின் சத்தங்கள் நிறையப்பெற்றதும், அநேகவித வாத்திய முழக்கங்களை உடையதும், கூனிகளும்-குள்ளிகளும் நிறைந்துள்ளதும், சம்பகம் (மற்றும்) அசோக (மரங்களால்) ஒளிர்வதும், கொடிவகைகள் (நிறைந்த) வீடுகளாலும், சித்திரங்கள் (நிறைந்த) வீடுகளாலும், தந்தங்களினாலும்-வெள்ளியினாலும்-தங்கத்தினாலும் இயற்றப்பட்ட யாகவேள்வி பீடங்களால் நிறைந்ததும், எப்பொழுதும் பூக்களாலும்-பழங்களாலும்-மரங்களாலும்-கிணறுகளாலும் அலங்கரிக்கப்பட்டதும், தந்தத்தினாலும்-வெள்ளியினாலும்-தங்கத்தினாலும் (செய்யப்பட்ட) சிறந்த ஆசனங்களால் நிறைந்ததும், விதவிதமான அன்னங்களாலும் பானங்களாலும், விதவிதமான உணவுப்பொருட்களாலும் வழங்கப்பட்டதும், தேவலோகத்திற்கு நிகராய், சிறந்ததாய் விளங்கும் கைகேயியின் வீட்டில் வெண்மேகங்களையுடைய ராகுவுடன் கூடின ஆகாயத்தில் நிஷாகரன் (அதாவது சந்திரன்) போலிருந்த (மாளிகைக்குள்) பிரவேசித்தார்.

 

மகாராஜா அந்த செல்வத்தோடுகூடின தனது அந்தப்புரத்தில் பிரவேசித்து, உத்தம படுக்கையில் பிரியமான மனைவியான கைகேயியை காணவில்லை. காமபலம் நிறைந்திருந்த மானுடர்க்கு அதிபதி அன்பிற்குரிய மனைவியை காணாதவராய் துன்புற்றார். அவர் காமத்தின் பொருளால் வினவினார். ஏனெனில் ராஜா, ஒருமுறை கூட மாளிகையுள் சூனியமாய் புகுந்ததில்லை. இதற்குமுன்னர் அவருடைய தேவி அந்த வேளையில் இல்லாமல் இருந்ததில்லை. மாளிகைக்கு வந்த ராஜா கைகேயியை அப்பொழுது சுயநலத்தில் விருப்பமுள்ளவளாயும், அறிவற்றவளாயும் அறியாமல் முன்போலவே விசாரித்தார். வாயில்காப்பவள் அச்சம் கொண்டவளாய் கரங்களை கூப்பியவளாகி இதில் இவ்வாறு சொன்னாள், ‘தேவரே! தேவி வெகு கோபங்கொண்டவராய் கோபமனையுள் ஓடினார்.

 

ராஜா வாயில்காப்பவளுடைய சொல்லை கேட்டு, மீண்டும் இன்னுமதிகமாய் மிகவும் மனம் கலங்கியவராய் நிலையற்ற, அமைதியற்ற இந்திரியங்களை பெற்றவராய் தளர்வுற்றார். அந்த ஜகத்தின் பதி அவ்விடத்தில் பூமியில் வீழ்ந்து படுத்திருந்தவளும், அத்தகைய சரியில்லா நிலையில் இருந்தவளுமாகிய அவளை இவ்வாறு கண்டு துக்கத்தால் பரிதவித்தார். அவர் இளம்பருவமுடையவளும், உயிரினும் மேலானவளுமாகிய மனைவியை வெறும்தரையில் கண்டார். வேர் களைந்து எறியப்பட்ட பூங்கொடியைப்போல் இருக்கிறவளும், வீழ்ந்த தேவதையைப்போல் இருக்கிறவளும், துன்புறும் கின்னரியை போலிருக்கிறவளும், கீழே விழுந்த அப்சரஸ் போலிருக்கிறவளும், தள்ளிவைக்கப்பட்ட பெண்மணியை போலிருக்கிறவளும், சிறைபிடிக்கப்பட்ட பெண்மானை போலிருக்கிறவளும், வனத்தில் வேடனால் நஞ்சு பூசிய அம்பினால் காயப்பட்ட பெண்யானையைப் போலிருக்கிறவளும், பாவ சங்கல்பம் (எடுத்துவிட்டவளாகிய) அவளை காட்டில் பெரும் யானையானது எவ்வண்ணமோ அவ்வண்ணமே, பாவமற்ற கிழவர் சிநேகத்தால் தொட்டார்.

 

காமத்தால் பீடிக்கப்பட்ட அவர், தாமரையிதழ் போல் கண்களையுடைய பெண்ணை இருகரங்களினாலும் தடவிக்கொடுத்து, பயங்கொண்ட மனமுடையவராய் இவ்விதம் பேசினார், ‘தேவி! உன்னிடத்தில் பற்றியிருக்கிற உனது குரோதத்தை நான் அறியேன். எவரேனும் உன்னை சபித்தார்களா? அல்லது உன்னை எவரேனும் அவமதித்தார்களா? மங்கலமானவளே! புழுதியில் (நீ) படுத்தியிருப்பதன் காரணத்தால் என்னை துக்கிக்க வைக்கிறது. நான் களிப்புற்றிருக்கையில் நீ பூதம் பிடித்த சிந்தையுடையவள் போலாகி என்னுடைய சித்தத்தை காயப்படுத்துபவளாய் ஏன் பூமியில் படுத்தாய்? என்னிடத்தில் எல்லாவிதத்திலும் மனமுவந்தவர்களும், சாமர்த்தியசாலிகளுமான வைத்தியர்கள் இருக்கின்றார்கள். அழகியே! வியாதியை இப்பொழுது இன்னதென்று சொல்லு. உன்னை சுகமற்றவளாய் செய்வார்கள். எவனாவது அபராதம் செய்தானா அல்லது எவனுக்காவது அபராதம் விளைவிக்கவேண்டுமோ அல்லது இப்பொழுது எவன் பிரியத்தையோ அல்லது எவன் மகத்தான தீமையையோ அடையவேண்டும்? நீ அழாதே. தேகத்தை வறண்டு போகச் செய்யாதே. கொலைசெய்யப்படத்தகாத எவன் தான் கொல்லப்படவேண்டும்? கொல்லப்படவேண்டிய எவன் தான் விடப்படவேண்டும்? நானும் என்னைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் உன் வசப்படி நடப்பவர்களே! தரித்திரன் செல்வனாகவும் அல்லது செல்வந்தன் எவன் வரியவனாக ஆகவேண்டும்? நான் ஜீவித்திருக்க வேண்டிய (காரணத்தாலுங்கூட) உனது அபிப்பிராயம் எதை நான் மறுக்க போகிறேன்? மனதில் (நீ) இச்சிப்பது எதோ அதை சொல்லிவிடு. என் விஷயத்தில் (உனது செல்வாக்கு) பலம் அறிந்தும் என்னிடத்தில் ஐயப்படுவது தகுந்ததில்லை. உனது பிரீதியை (நான்) செய்கிறேன். மேலும், உனக்கு நற்செயலை வாக்களிக்கிறேன். எதுவரையில் (சூர்ய)சக்கிரம் சுழல்கிறதோ அதுவரையிலுள்ள கீழத்தேசங்கள், சிந்துதேசங்கள், சௌவீரதேசங்கள், சௌராஷ்ட்ரதேசங்கள், தென்தேசங்கள், வங்கம்-அங்கம்-மகதம் (என்ற தேசங்கள்), மத்ஸ்யதேசங்கள், காசிதேசங்கள், கோஸலதேசங்கள் எல்லாமும் எனது (ஆளுகைக்கு உட்பட்ட) பூமி. கைகேயி! அதில் பல திரவியங்களும், தனதான்யங்களும், ஆடுமாடுகளும் இருக்கின்றன. நீ மனதில் இச்சைகொண்டிருப்பது அதில் எது எது அடையப்பட வேண்டும்? அச்சப்படுபவளே! எதனால் உனக்கு பயம் உண்டாகியிருக்கிறதோ அதை நீ எனக்கு சொல்லு. ரஷ்மிவான் (அதாவது சூர்யன்) பனியை எவ்வண்ணமோ அவ்வண்ணமே அதை உனக்கு நான் அகற்றுகிறேன். பேரழகியே! எழுந்திரு; எழுந்திரு. கைகேயி! உனக்கு ஆயாசம் ஏன்?’

 

அந்த பிரியமற்றதை சொல்வதையே விரும்பம் கொண்டிருந்தவளுக்கு, இவ்வாறு (தசரதர்) சொல்லியதற்கு (செவிசாத்தியவளுமாகிய) அவள் ஆறுதல் அடைந்தவளாய், கணவரை இன்னும் அதிகமாய் துன்புறச் செய்ய ஆரம்பித்தாள்.

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் பத்தாவது ஸர்க்கம் முற்றிற்று ||

Saturday, June 27, 2020

ஒன்பதாவது ஸர்க்கம் – (ஸ்ரீ)ராமரை நாடுகடத்த ஆலோசிப்பதும், கைகேயி குரோத வீட்டினுள் பிரவேசிப்பதும்


இவ்வாறு இதில் சொல்லக் கேட்ட கைகேயியும், குரோதத்தால் ஜொலிக்கும் முகமுடையவளாய், உஷ்ணமான பெரு மூச்சுவிட்டு, மந்தராவிடம் இவ்விதம் கூறினாள், ‘இப்பொழுதே நான் விரைவாய் (ஸ்ரீ)ராமனை இங்கிருந்து வனத்திற்கு அனுப்பிவிடுகிறேன். சீக்கிரத்தில் பரதனை யுவராஜ்யனாய் அபிஷேகம் (செய்து) வைக்கிறேன். மந்தரே! இப்பொழுது (ஸ்ரீ)ராமன் எவ்வகையில், எந்த உபாயத்தால் இல்லாமல் போவான். அதன்மேல் பரதன் ராஜ்யத்தை அடையவேண்டும். இதனை ஆலோசித்திரு.

 

இப்படியாய் அந்த தேவியால் சொல்லப்பட்டவளும், (ஸ்ரீ)ராமரது நன்மைக்கு இடையூறாய் இருக்கிறவளும், பாவ தர்ஷினியுமான மந்தரா கைகேயியிடம் இவ்விதம் சொன்னாள், ‘கைகேயி! மிக்க மகிழ்ச்சி! தமது புத்திரனாகிய பரதன் மட்டுமே ராஜ்யத்தை அடைவது எப்படியோ அதைச் சொல்கிறேன். எனக்கு செவிகொடுக்கப்படட்டும். கைகேயி! தாம் தமக்கான பிரியத்தை என்னிடமிருந்து கேட்க இச்சை கொள்கிறீர்கள். அதனை மறந்துவிட்டீரா? அல்லது நினைவிருந்தும் மறைக்கிறீரா என்ன? விலாசினி (அதாவது சுந்தரியே), எதுவாயினும் தமது விருப்பம். சொல்லியிருப்பதையே என்னிடம் கேட்கவேண்டுமென்றால் நான் சொல்கிறேன். கேளுங்கள். கேட்டதும் ஆராயப்படட்டும்.

 

கைகேயி, அந்த மந்தராவின் இந்த வார்த்தையை கேட்டதுமே, நன்கு விரிக்கப்பட்டிருந்த படுக்கையிலிருந்து கொஞ்சம் எழுந்திருந்து, இவ்விதம் சொன்னாள், ‘மந்தரே!  (ஸ்ரீ)ராமன் எவ்வகையில், எந்த உபாயத்தால் இல்லாமற் போவான்? பரதன் ராஜ்யத்தை அடையவேண்டும். உபாயத்தை நீ எனக்கு சொல்லக்கடவாய்.

 

இதில் இவ்வாறு கைகேயியாலே சொல்லப்பட்டவளும், பாவதர்ஷினியும், (ஸ்ரீ)ராமரது வளத்தில் இடையூறு செய்கிறவளும், கூனியுமான மந்தரா (பின்வரும்) வார்த்தையை சொன்னாள், ‘தமது பதி (அதாவது தசரதர்) தேவாசுர யுத்தத்தில் ராஜரிஷிகளோடு கூட தேவராஜனுக்கு (அதாவது தேவேந்திரனுக்கு) சகாயம் செய்கிறவராகி தம்மை (அதாவது கைகேயியை) உடன் அழைத்துச் சென்றார். கைகேயி! தென் திசையில் தண்டகாரண்யத்தில் திமித்வஜன் (என்ற அசுரன்) எங்கிருந்தானோ அந்த வைஜயந்தம் என்று பெயர்பெற்ற பட்டணத்திற்கு போய்ச் சேர்ந்தார். ஷம்பரன் என்ற பெயர்கொண்டவனும், நூற்றுக்கணக்கான மாயைகளில் (நிபுணனும்), தேவகணங்களால் வெல்லமுடியாதவனுமாகிய அந்த மகா அசுரன் ஷக்ரனுக்கு (அதாவது தேவேந்திரனுக்கு) போரை தந்தான். ராக்ஷஸர்கள் அந்த பெரும் போரில் இரவில் விரைவாய், அலட்சியம் செய்தவர்களாய், அம்புகளால் வீழ்த்தப்பட்டும்-உறங்கிக்கொண்டும் இருந்த மனிதர்களை கொன்றனர். அப்பொழுது பெரும் கரம் கொண்டவரான தசரத ராஜா அஸ்திரங்களைக்கொண்டு மகத்தான யுத்தம் புரிந்தார். அங்கு அசுரர்களை துண்டுதுண்டாய் வெட்டி வீழ்த்தினார். தேவி! அங்கே அம்புகளால் தாக்கப்பட்டவரும், மூர்ச்சையடைந்தவருமாகிய தமது பதி தம்மால் போர்களத்திலிருந்து வேறிடத்திற்கு கொண்டுபோகப்பட்டு தம்மாலே ரட்சிக்கப்பட்டார். பார்க்க சுபமாய் இருப்பவளே! சந்தோஷப்படுத்தப்பட்டவராகிய அவரால் தமக்கு இரண்டு வரங்கள் அளிக்கப்பட்டன. தேவி! அந்த பதி (அதாவது தசரதர்) தம்மால் எப்பொழுது இச்சைகொள்கிறேனோ அப்பொழுது வரங்களை பெற்றுக்கொள்கிறேன்என்று கூறப்பட்டார் (அன்றோ!). அப்பொழுது அப்படியே ஆகட்டும்என்று அந்த மகாத்மாவால் சொல்லப்பட்டது.

 

தேவி!  நான் (இதை) அறியாதவளாய் இருந்தேன். தம்மாலே இதற்குமுன் இது சொல்லப்பட்டது. தம்மிடமுள்ள சிநேகத்தால் உரைக்கப்பட்ட இது எனது மனதில் தங்கியிருக்கிறது. தாம் (ஸ்ரீ)ராமனுக்கு பதினான்கு வருடங்கள் (வனத்திற்கு) அனுப்புதல், மேலும் பரதனுக்கு பட்டாபிஷேகம் என்ற இந்த இரண்டு வரங்களையும் யாசியுங்கள். கணவரை வற்புறுத்தி (ஸ்ரீ)ராமனது பட்டாபிஷேகத்திற்கான பொருட்களை நிறுத்திட வேண்டும். (ஸ்ரீ)ராமன் பதினான்கு வருடங்கள் வனத்திற்கு அனுப்பட்டால், (தமது) புத்திரன் பிரஜைகளின் உணர்வுடன் நடந்து, சிநேகமுடையவனாய், அசைக்கமுடியாதவனாய் ஆகிவிடுவான்.

 

அஷ்வபதியின் மகளே, இப்பொழுதே தாம் குரோதம் வரும் சமயங்களில் உறையும் அறைக்குள் சென்று, பிணக்கு உடையாள் போலாகி, அழுக்கு ஆடைகளை அணிந்தவளாய், விரிப்பு ஏதுமில்லாத வெறும் பூமியில் படுத்துக்கொண்டு விடும். அவரை கண்டதும் தரையில் சோகத்தால் பீடிக்கப்பட்டவளாயும், அழுதுகொண்டும் இருங்கள். அவரை முகமெடுத்துப் பார்க்கவேண்டாம், பேசவும் வேண்டாம். தாம் எப்பொழுதும் கணவரது அன்பிற்கு பாத்திரமானவர். அந்த மகாராஜா தமக்கென்றால் தீயிலும் குதித்துவிடுவார். இதில் எனக்கு ஐயமில்லை. ராஜாவிற்கோ கோபத்திலிருக்கும் தம்மை காணவும் சகியார். கோபம்வர நடக்கவும் மாட்டார். தமது பிரியத்தைப்பெற பிராணனையும் விட்டுவிடுவார். மந்தமான சுபாவம் உடையவளே! தமது சௌபாக்கிய பலத்தை அறிந்துகொள்ளும். வேந்தரால் தமது வாக்கினை தட்ட இயலாது. தசரத ராஜா விதவிதமான மணிகளையும், முத்துக்களையும், ஸ்வர்ணங்களையும், ரத்தினங்களையும் கொடுப்பார். அவைகள்மேல் மனதை வைத்திடாதீர். மகாபாக்கியமுடையவளே! தசரதருக்கு தேவாசுர யுத்தத்தில் எந்த இரண்டு வரங்களை கொடுத்தாரோ அவ்விரண்டையும் நினைப்பூட்டுக. உமது வளம் முறியடிக்கப்படாமல் (இருப்பதில் கவனம் கொள்க). ராகவர் (அதாவது தசரதர்) தாமே (தரையிலிருந்து) தூக்கி, தமக்கு வரத்தினை அளிப்பார். இது எப்பொழுதோ அப்பொழுது தாம் மகாராஜரை இதில் நிலைநிறுத்தி வரத்தை இவ்விதம் கேட்பீராக, ‘(ஸ்ரீ)ராமனை பதினான்கு வருடங்கள் வனத்திற்கு அனுப்பிவையும். பரதன் உலகில் மன்னர்களில் காளையரான ராஜாவாய் நியமிக்கப்படட்டும்.

 

(ஸ்ரீ)ராமன் பதினான்கு வருடங்கள் வனத்திற்கு சென்றுவிடுவானாகில், தமது புதல்வன் திடமானவனாய் மேலும் வேரூன்றியவனாயும், மீதமிருக்கும் (காலத்திற்கு) நிலைத்திருப்பான். அழகிய தேவி! அவரை (ஸ்ரீ)ராமனது (வனவாச) அனுப்புதலையே வரமாக யாசிப்பீர். இவ்விதமாய் தமது புத்திரனுக்கு எல்லாவித வளங்களும் சித்திக்கின்றன. இவ்வாறு அனுப்பப்பெற்ற (ஸ்ரீ)ராமனும் (மக்களின்) அன்பிழந்தவனாய் ஆகிவிடுவான். தமது பரதனும் பகையொழிந்த ராஜாவாய் விளங்குவான். எந்த காலத்திற்குள் (ஸ்ரீ)ராமன் வனத்திலிருந்து திரும்பிவருகிறானோ அந்த காலத்திற்குள்ளே தமது அறிவார்ந்த புத்திரன் நண்பர்களுடன் கூடி வேரூன்றியவனாக, மக்களை (தன் பக்கம்) இழுத்துக்கொண்டவனாகவும் ஆகிவிடுவான். தமக்கு இதில் சரியான காலமிது என்று எண்ணுகிறேன். பீதி ஒழித்து, (உமது) வலியுறுத்தல் மூலம் ராஜாவை (ஸ்ரீ)ராம அபிஷேக சங்கல்பத்தில் தங்கள் பக்கம் கொணர வேண்டும்.

 

(இதனை) புரிந்துகொண்ட அந்த கைகேயியோ மிகவும் நல்ல இயல்பு கொண்டவளாவாள். அப்பொழுது கூனியின் வாக்கியத்தால் சிறுமிபோல் ஆகி, அவளால் தீமையை நன்மைபோல் கற்பிக்கப்பெற்றவளும், மிகுந்த ஆச்சர்யத்தை அடைந்து விட்டவளுமாகிய அந்த கைகேயி தவறான பாதையில் நுழைந்துவிட்டவளாகி, மகிழ்ந்தவளாய் மந்தராவிடம் இவ்விதம் சொன்னாள், ‘கூனியே, உலகத்திலுள்ள கூனிகளில் அறிவார்ந்த முறையில் தீர்மானிப்பதில் உத்தமமானவளாய் விளங்குகிறாய். சிறந்தவற்றை சொல்வதில் (நீ) சிறந்தவள் (என்று நான் இதுவரையில்) அறிந்திலேன். நான் இதில் ராஜாவின் நோக்கத்தை கண்டுகொள்ளாதிருந்தேன். கூனியே! எனது வளத்தில் நீ மட்டும்தான் எப்பொழுதும் நோக்கமுள்ளவள். (எனது) நலம் விரும்பி. கூனிகள் மிகக்கொடிய மோசமான உடல் அமைப்பு உடையவர்களெனவும், வக்கிரமானவர்கள் எனவும் இருக்கிறார்கள். தென்றால் வளைந்திடும் தாமரையைப் போல் நீ பிரியமானவளாக விளங்குகிறாய். உனது மார்பு தோள்வரையிலும் உயர்ந்து விளங்குகிறது. அதன் கீழே, அழகிய தொப்புளுடைய வயிறும் வெட்க்கம்கொண்டது போன்றதாகி இளைத்து இருக்கிறது. மந்தரே! இடுப்பு பரிபூரணமாயும், பெரிய கொங்கைகளைக் கொண்டும், மாசற்ற நிலவிற்கு சமமான முகமுடனும் நீ ஒளிர்கின்றாய். மெல்லிய ஒட்டியாணத்தால் பிரகாசிக்கின்ற உனது இடுப்பு சப்தம் எழுப்புகிறது. தொடைகளிரண்டும் நன்றாய் உருண்டு திரண்டிருக்கின்றன. கால்கள் இரண்டும் நீண்டிருக்கின்றன. மந்தரே! என் முன்னே நீண்ட தொடைகளுடன் வெண்பட்டாடை அணிந்தவளாய் நடந்திடும் நீ ராஜ அன்னப்பறவை போல் விளங்குகிறாய். அசுரர்களுக்கு அதிபதியான ஷம்பரனிடத்தில் எந்த மாயைகள் ஆயிரக்கணக்காய் இருந்தனவோ, அவைகள் அனைத்தும் இன்னும் இதர ஆயிரங்களும் உன்னிடத்தில் இருக்கின்றன. உனது மதியும், க்ஷத்ரிய வித்யைகளும், மாயைகளும் உனது இந்த கூனில் வசிக்கின்றன. அதனால்தான் இது தேரின் கோணம் போன்றதாய் நீண்டதாய் இருக்கிறது. கூனியே! ராகவன் காட்டிற்கு போய்விட்ட பின்னர், பரதன் பட்டாபிஷேகம் பெற்ற பின்னர் உனது இதில் பொன்னாற் செய்த மாலையை சூட்டுகிறேன். மந்தரே! காரியம் கைகூடினவளாகி, சந்தோஷமடைந்தவளாகிய (நான்) நன்கு சுத்தீகரிக்கப்பட்ட, நல்ல ஜாதி ஸ்வர்ணத்தை உனது கூனில் பூசுவேன். கூனியே! உனது முகத்தில் சுபமாய் பொன்னால் செய்யப்பட்டதுமான திலகத்தையும், சுபமான பல்வேறு ஆபரணங்களையும் அணிவிப்பேன். சுபமான ஆடைகளை உடுத்தி, தேவதையை போல் உலாவப்போகிறாய். சந்திரனுக்கு சவால்விடும் முகத்துடன் ஒப்பற்றவளாய், வெறுப்பவர்களுக்கு மத்தியில் (அவர்களை) வருத்துபவளாய் முக்கியமான கதியை அடைவாய்.  எனக்கு நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே கூனியான உனக்கும் அனைத்து ஆபரணங்களைத் தரித்துக்கொண்டவர்களான கூனிகள் எப்பொழுதும் (உனது) பாதத்தில் பணிவிடை செய்திருப்பார்கள்.

 

இவ்வாறு புகழப்பட்ட அவள் சுத்தமான படுக்கையில், வேள்விமேடையில் ஒளிரும் அக்னியை போல் படுத்துக்கொண்டிருந்த கைகேயியிடம் இவ்விதம் சொன்னாள், ‘மங்கலமானவளே, வெள்ளம் சென்றபிறகு அணைபோடுவது பிரயோஜனமில்லை. எழுந்திரும். மங்கலமானதை செய்திடும். ராஜாவிடம் (உமது செல்வாக்கை) காண்பியும்.

 

அப்பொழுது அப்படியான உற்சாகப்படுத்தப்பட்டவளும், சௌபாக்கியத்தின் போதையால் கர்வம் கொண்டவளும், விசாலமான கண்களையுடையவளும், சிறந்த அங்கங்களையுடையவளுமான தேவி கைகேயி கூனியின் வாக்கியத்திற்கு வசப்பட்டவளாய், கோபவீட்டினை (அதாவது கோபமிருக்கும் பொழுது தங்கிடும் இல்லத்தை) மந்தரையுடன் கூட அடைந்து, அநேக நூறாயிரக்கணக்கான முத்துமாலைகளையும், மிகவும் விலையுயர்ந்தனவும், சுபமானவைகளுமான ஆபரங்களையெல்லாம் கழற்றியெறிந்து அவ்விடத்தில் (வெறும்) தரையில் பொற்பதுமை போன்றவளாய் படுத்துக்கொண்டு, மந்தரையிடம் இவ்விதம் சொன்னாள், ‘ராகவன் வனத்தை பெற்றுவிட்டானாகில் பரதன் புவியை அடைவான். இதில்லை என்றால் கூனியே! இங்கேயே என்னை இறந்தவளாக வேந்தருக்கு தெரிவிப்பாய். எனக்கு தங்கத்தால் எந்த பயனும் இல்லை. ரத்தினங்களாலும் இல்லை. உணவுப்பண்டங்களாலும் இல்லை. (ஸ்ரீ)ராமன் பட்டாபிஷேகப்படுகிறான் என்றால் இதுதான் என்னுடைய உயிருக்கு முடிவு.

 

பின்னர், கூனி வேந்தரின் மனைவியும், பரதரின் தாயுமான அவளிடம், (ஸ்ரீ)ராமருக்கு தீமையை அமைப்பதுமான, மிகவும் தீவிரமான வார்த்தைகளால் (அவளுக்கு) நன்மைபயக்கும் மொழியை மீண்டும் கூறினாள், ‘மங்கலமானவளே! ராகவன் இந்த ராஜ்யத்தை அடைந்தவனாகில் தமது புதல்வனோடு கூடியவராய் நிச்சயமாய் தவிப்பீர். ஆதலால் எந்த வழியால் தமது புதல்வராகிய பரதன் அபிஷேகம் பெறுவாரோ அவ்வண்ணமே அதை முயற்சியும்.

 

மஹிஷீ (அதாவது மகாராணி), இதில் அவ்வாறாய் கூனியால் அம்புகளையொத்த சொற்களால் துளைக்கப்பட்டவளாய் மீண்டும் மீண்டும் தைக்கப்பட்டவளாய் மீண்டும் மிகவும் ஆச்சரியப்பட்டவளாய் இதயத்தில் இருகைகளையும் வைத்துக்கொண்டு, கோபத்திலிருக்கும் கூனியிடம் மீண்டும் கூறினாள், ‘கூனியே! ராகவன் நெடுங்காலம் வனத்திற்கு சென்றுவிட்டானென்றால் பரதன் விருப்பங்கள் நிறைவேறியவனாக விளங்குவான். இல்லாவிடில், என்னை இங்கிருந்து யமனுடைய உலகத்திற்கு சென்றவளாய் பார்த்து, (நீ) தெரிவிக்கப்போகின்றாய். ராகவன் இங்கிருந்து காட்டிற்கு போகாத பட்சத்தில் நான் யாதொன்றையும் விரும்பேன். படுக்கைகளையும் விரும்பேன். பூமாலைகளையும் அணியேன். சந்தனத்தையும் பூசேன். மைதீட்டல், பானம், உணவு எதையும் கொள்ளேன். இவ்வுலகில் ஜீவித்திருப்பதையும் விரும்பேன்.

 

இந்த மிகக்கொடிய சொல்லை சொல்லிவிட்டு (அந்த) அழகி அதற்குமேல் அனைத்து ஆபரணங்களையும் கழற்றியெறிந்துவிட்டு, (விண்ணிலிருந்து) வீழ்ந்த கின்னரியைப்போல் (கின்னரிகள் என்பவர்கள் தேவலோக இசை கலைஞர்கள், தலையிலிருந்து-இடுப்பு வரை மனித உருவும், இடுப்பிலிருந்து-கால் வரை பறவை உருவொடும் இருப்பர் என்ற சுட்டிக்காட்டப்படுகிறது), விரிப்பால் மூடப்படாத (வெறும்)தரையில் அப்பொழுது படுத்துவிட்டாள். அந்த நரேந்திரரின் பத்தினி அவ்வாறு மனச்சோர்வுடையவளாய், மிகுந்த கோப இருளினால் மூடப்பட்ட முகமுடையவளாய், உத்தமமான மாலைகளையும், அணிகளையும் கழற்றி எறிந்தவளாய், ஒளியற்ற நட்சத்திரங்களுடைய இருள் சூழ்ந்த ஆகாயம்போல் விளங்கினாள்.

 

|| இவ்வாறாய் வால்மீகியின் ஆதிகாவியமான ஸ்ரீமத்ராமாயணத்தின் அயோத்யா காண்டத்தின் ஒன்பதாவது ஸர்க்கம் முற்றிற்று ||